நியாயமான விலையில் நெல்லை விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (01.02.2024) இடம் பெற்றது.
கரடியனாறு விவசாய ஆராய்ச்சி மையத்திற்கான விவசாய ஆராய்ச்சி அதிகாரியின் நியமனம் தொடர்பாக விவசாயிகளினால் அதிகாரிகளிடம் இதன்போது கோரிக்கை விடுப்பட்டதுடன்,
விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட இம்மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்ட விவசாயம், பெரும்போக விவசாயத்தின் முன்னேற்றம், மழை வெள்ளத்தினால் பாதிக்கபட்ட விவசாய நிலங்களுக்கான காப்புறுதி , தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன் 2024 ஆம் ஆண்டிற்கான சிறு போக பயிர்ச்செய்கை கால அட்டவணையும் இதன்போது தயாரிக்கப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதிஸ்குமார், மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என்.நாகரெத்தினம், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர்கள், உயர் அதிகாரிகள், விவசாய மற்றும் கால்நடை அமைப்புக்களின் குழுத்தலைவர்கள், மற்றும் விவசாய அமைப்புக்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.