தமிழரசுக் கட்சியினர், கட்சிக்குள்  ஒற்றுமையை பலப்படுத்தி தமிழ் தேசியக்  கூட்டமைப்பையும் பலப்படுத்த வேண்டும்

தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாக செயல்படும் கட்சி தாங்கள் தான் தாய்க் கட்சி என்று சொல்லும் தமிழரசுக் கட்சியினர், கட்சிக்குள்  ஒற்றுமையை பலப்படுத்தி தமிழ் தேசியக்  கூட்டமைப்பையும் பலப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று (01) களுவாஞ்சிகுடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து  ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் மக்களுக்காக அரசியல் செய்யும் கட்சிகள், ஒன்றாக பயணிக்க வேண்டிய காலநிலை இதுவாகும். 2009 இற்கு முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமானகட்சியாக இருந்தது. அந்த நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள்கூட இயங்கு நிலையிலிருந்தார்கள். நாங்கள் அரசியல் ரீதியாகவும் பலமாக இருந்தோம். இந்நிலையில் மிகவும் பலமாக இருக்க வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக்காலகட்டத்தில் சிதைந்து பல்வேறு குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

2004 ஆம் அண்டிலிருந்து  இலங்கைத் தமிழரசுக் கட்சி முக்கியமான கட்சியாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக தமிழரசுக் கட்சி தனியாக தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து சென்றார்கள். அப்போது கூட்டமைப்பிலிருந்து தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும், ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற ஈழமக்கள் புரட்சிகர முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி, மற்றும் தமிழ் தேசியக் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து பதிவு செய்யப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம்.

2009 இங்குப் பின்பு கூட்டமைப்பை பதிவு செய்யாததுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கூட சிதைவடைவதற்குக் காரணம்.

இந்நிலையில் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே ஒரு குழப்ப நிலை உருவாகியிருப்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். அக்கட்சியின் தலைவர்கூட வரலாற்றிலே வாக்களிப்பின் மூலம் தெரிவாகியிருக்கின்றார். அது கடந்த 28 ஆம் திகதி நடைபெறவிருந்தது, அது நடைபெறவில்லை. செயலாளர் மற்றும் ஏனைய நிருவாகங்களுக்கான தெரிவுகள்கூட நடைபெற்றிருக்கின்றது ஆனால் அது ஒழுங்காக நடைபெறவில்லை என ஒருசாரார் சொல்கின்றார்கள். இந்த நிலையில் தமிழரசுக் கட்சி ஒன்றை உணரவேண்டும்: தாங்கள் தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாக பயணிக்கும் கட்சி தாங்கள்தான் தாய்க் கட்சி என்று சொல்பவர்கள், உங்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டு வந்து தமிழ் தேசியக் கூட்டடைமைப் பலப்படுத்த வேண்டும். அக்கட்சிக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள  சிறிதரன் அவர்கள்கூட 2009 இற்கு முன்பு இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்.

தற்போது நாங்கள் ஐந்து கட்சிகள் சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டணியாக பதிவு செய்யப்பட்டு ஒரு அமைப்பின் கீழ் யாப்பு நிருவாகத்தின் கீழ் இருக்கின்றோம் எனவே தமிழரசுக் கட்சியும் அக்கூட்டமைப்புக்குள் வந்து இணைந்து அனைவரும் ஒருமித்து பயணிப்போமாக இருந்தால் அகில இலங்கை தமிழ் காங்கிரசும்,  பா.உ விக்னேஸ்வரன் போன்றோரும் எம்முடன் இணைவார்களாக இருந்தால் தமிழ் மக்களின் பலம் சர்வதேசத்திற்கு உணர்த்தப்படும்.

2004 ஆண்டு தமிழ் தேசியக் சுட்டமைப்பு பலமாக இருக்கும்போது 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்கள் சார்பில் செயல்பட்டனர் . சர்வதேசம் அதனை மதித்தது.  மீண்டும் அதே நிலமைக்குச் செல்வோமாக இருந்தால் ஒற்றுமையாக பயணித்து 20 பாராளுமன்ற உறுப்பிளர்களைப் பெறுவோமாக இருந்தால் சர்வதேசம் எங்களைத் திரும்பிப் பார்க்கும்.  தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வைத் தருவதற்கு முன்வருவார்கள். எனவே இலங்கைத் தமிழரசுக் கட்சி தங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பாக பயணிப்பதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். என அவர்  மேலும் தெரிவித்தார்

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!