இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் தம்மை இலங்கை தமிழர்கள் என அடையாளப்படுத்தினால், அது பிரச்சினைகளை மூடிமறைப்பதாகிவிடும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. நான்கு அமைச்சுகளின் செயலாளர்கள் இணைந்து இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தம்மை இலங்கை தமிழர்கள் என அடையாளப்படுத்தினால் அது பிரச்சினைகளை மூடிமறைப்பதாகிவிடும். கலாசார ரீதியில் நான் மலையகத் தமிழன். சட்ட ரீதியில் இந்திய வம்சாவளி தமிழர். எனவே, சனத்தொகை கணக்கெடுப்பின்போது மக்கள் இம்முறை விழிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் தோட்டங்களில் வாழ்பவர்கள்தான் மலையக தமிழர்கள், ஏனையோர் இலங்கை தமிழர்கள் எனக் கருதி சில அதிகாரிகள், தவறிழைத்துவிட்டனர் என்றும் அவர் கூறினார்.

மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (10) நடைபெற்ற சபை ஒத்தி வைப்பு பிரேரணை மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்றைய விவாதத்தை அவதானித்தபோது மலையக மக்களுக்கு விரைவில் காணி உரிமை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. காணி அமைச்சர், தொழில் அமைச்சர், பெருந்தோட்டத்துறை அமைச்சர் ஆகியோருடனும், ஜனாதிபதியுடனும் இது தொடர்பாகன பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளேன். அமைச்சுகளின் செயலாளர்கள் நால்வரும் ஒன்றிணைந்து 10 பேர்ச்சஸ் காணிக்குரிய ஏற்பாட்டை செய்யவுள்ளனர்.

அதேவேளை, ஜனாதிபதி மலையக எம்.பிக்களை சந்திக்கின்றார். இதில் பங்கேற்குமாறு முற்போக்கு கூட்டணியினரை அழைக்கின்றேன். இது சிறந்த வாய்ப்பு. நானும், ரமேசும் பங்கேற்பது சிக்கல் எனில் நாங்கள் பின் வரிசையில் அமர்ந்தாவது கூட்டத்தில் பங்கேற்கின்றோம். கூட்டணியினர் வரவேண்டும்.’ என்றும் ; அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன