டிமென்ஷியா நோயுடன் வாழ்ந்துவரும் நபர்கள் தொடர்பில் புரிதலை ஏற்படுத்துவதற்கும், அவர்கள் மீது பரிவு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் முன்னோடி சிறுவர் புத்தகமொன்று வெளியிடப்படுவதை லங்கா அல்சைமர் பதனம் பெருமையுடன் அறிவிக்கின்றது. எட்டு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் வாசிக்கக் கூடிய வகையில் மிகவும் அழகான சித்திரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம், அல்மைசர் நோயைக் கொண்டவர்கள் குறித்த இதயபூர்வமான விடயங்களை வெளிப்படுத்துவதுடன், குடும்பத்திற்குள் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை ஊக்குவிக்கும் அதேநேரம்,அன்புக்குரியவர்கள் மத்தியில் ஏற்படக்கூடிய மாற்றத்தை இளம் வாசகர்கள் உணர்ந்துகொள்வதற்கான வழியை ஏற்படுத்தும்.
தினப்பதிவேடொன்றை எழுதுமாறு பாடசாலையில் வழங்கப்பட்ட பணியை முன்னெடுக்கும் சிறுமி ஒருவரின் பார்வையின் ஊடாகச் சொல்லப்படும் இந்தக் கதை, நினைவாற்றல் இழப்பு மற்றும் டிமொன்ஷியாவுக்கான அறிகுறிகளுக்கு முகங்கொடுக்கும் அன்புக்குரிய பாட்டிக்கும் அச்சிறுமிக்கும் இடையில் வளர்ந்துவரும் அன்பான உறவுடன் நகர்ந்து செல்கின்றது. பாட்டியின் நடத்தையில் மாற்றங்களை அவதானிக்கும் சிறுமி, பெற்றோரின் உதவியுடன் அதனைக் கண்டுபிடிக்கும் பயணத்தை ஆரம்பித்து, பொறுமை அன்பு மற்றும் பொக்கிஷமான நினைவுகள் மூலம் படிப்படியாக நிலைமையைக் கற்றுக்கொள்கின்றார். ஞாபகமறதி, குழப்பம் மற்றும் நபர்களில் ஏற்படக்கூடிய மாற்றம் போன்ற டிமென்ஷியாவுடன் தொடர்புபட்ட அறிகுறிகள் பற்றிய எளிமையான ஆனால் சக்திவாய்ந்த விளக்கத்தை இந்தப் புத்தகம் வழங்குகின்றது. இந்தப் புத்தகம் கருணை, மீளும் தன்மை மற்றும் முக்கியமான தருணங்களைப் பகிர்ந்துகொள்வது போன்றவற்றின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன், கடந்த கால நினைவுகள் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கையில் தாத்தா, பாட்டிமார் வகிக்கும் விலைமதிப்பற்ற வகிபாகத்தையும் கொண்டாடுகின்றது. ஈடுபாட்டுடன் கதைசெல்லும் முறையின் ஊடாக வயதுக்கு ஏற்றவாறும் ஆதரவான முறையிலும் டிமென்ஷியாவைப் பற்றி குடும்பங்கள் மத்தியில் கலந்துரையாடல்கள் ஏற்படுவதையும் இந்தப் புத்தகம் ஊக்குவிக்கின்றது. அனைவரையும் சென்றடையும் நோக்கில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இப்புத்தகம் கிடைக்கின்றது.
இந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட பின்னர் லங்கா அல்சைமர் பதனம், புத்தகங்களை வாசிக்கும் நிகழ்வுகள், பாடசாலை நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்குதல் மற்றும் சமூகங்கள் மத்தியிலான கலந்துரையாடல்கள் போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் நாடு முழுவதிலும் தொடர்ச்சியான விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. மூன்று மாத காலப் பகுதியில் நிர்வகிக்கக் கூடிய வகையில், லங்கா அல்சைமர் அறக்கட்டளையின் வலுவான சமூக வலையமைப்புக்கள் இலங்கை முழுவதும் உள்ள சிறுவர்கள் மற்றும் குடும்பங்களிடம் இப்புத்தகம் சென்றடைவதை உறுதிப்படுத்தும்.
லங்கா அல்சைமர் பதனம், ஊடகவியலாளர் சந்திப்பில் தனது புதிய இணையத்தளத்தையும் அங்குரார்ப்பணம் செய்தது. இது அல்சைமர் மற்றும் டிமென்ஷியா தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கான அணுகலை வழங்குவதுடன், இது தொடர்பில் அல்சைமர் பதனம் முன்னெடுக்கும் சேவைபற்றியும் மக்கள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இந்தப் புத்தகத்தின் டிஜிட்டல் பதிப்பை இத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
மருதானையில் உள்ள லங்கா அல்சைமர் பதனத்தின் தகவல் மற்றும் வளநிலையத்தில் அடையாள விலையில் இப்புத்தகத்தைக் கொள்வனவு செய்ய முடியும்.
டிமென்ஷியா தொடர்பில் விழிப்புணர்வூட்டுவது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது சட்டபூர்வமான அமைப்பே லங்கா அல்சைமர் பதனமாகும். அல்சைமர் நோயைக் கொண்ட நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் இது உறுதியாக உள்ளது. சமூக சேவைகள் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள லங்கா அல்சைமர் பதனம், டிமென்ஷியாவைச் சுற்றியுள்ள களங்கம் மற்றும் தவறான தகவல்களை அகற்ற தீவிரமாகச் செயற்படும் அதேவேளையில், இதுபற்றிய இலவசக் கல்வி, பராமரிப்பு மற்றும் ஆதரவு சேவைகளையும் முன்னெடுத்து வருகின்றது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நினைவாற்றலைப் பரிசோதிப்பது, டிமென்ஷியாவுடைய நபர்களுக்கான செயற்பாட்டு மையம், பராமரிப்பு ஒத்துழைப்பு வழங்கும் குழுக்கள் மற்றும் ஆலோசனை சேவைகள் உள்ளிட்ட பிரதான சேவைகளை அல்சைமர் பதனம் முன்னெடுத்து வருகின்றது. டிமென்சிஷா தொடர்பில் உதவும் விசேட தொலைபேசி இலக்கத்தை செயற்படுத்தி வருவதுடன், காலாண்டுக்கு ஒருமுறை செய்திமடலைப் பிரசுரிப்பதுடன், டிமென்ஷியா உள்ள நபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களின் அடையாளங்களை உள்ளடக்கிய பிரேஸ்லெட்களை வழங்குவது போன்ற செயற்பாடுகளையும் லங்கா அல்சைமர் பதனம் முன்னெடுத்து வருகின்றது.
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் புரிந்துகொண்டு அவர்களை ஏற்றுக்கொள்ளும் சமூகமொன்றை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய படியாக இந்த முயற்சி அமைந்துள்ளது. எதிர்கால சந்ததியினரை விழிப்புணர்வூட்டுவதன் ஊடாக டிமென்ஷியாவுடைய நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் குரல்கள் செவிமடுக்கப்பட்டு, புரிந்துகொள்ளப்பட்டு வலுவூட்டப்படுவதை உறுதிப்படுத்துவதன் ஊடாக பரிதாபம் மற்றும் ஆதரவு மிக்க கலாசாரத்தை உருவாக்க முடியும் என லங்கா அல்சைமர் பதனம் நம்புகின்றது.