கொழும்பு இலகு ரயில்வேலைத்திட்டத்தை இடைநடுவில் கைவிட்டமைக்காக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி கவலை தெரிவிப்பு

ஜப்பான் உதவியுடன் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் வேலைத்திட்டத்தினை இடை நடுவில் கைவிட்டுச் சென்றமைக்காக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை தெரிவித்தார்.

இரு தரப்பினரதும் இணக்கப்பாடு இல்லாமல் பாரிய திட்டங்களுக்கான இருதரப்பு ஒப்பந்தங்களை இடைநிறுத்துவதை தவிர்ப்பதற்கு அவசியமான சட்டதிட்டங்களை உருவாக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, பாரிய திட்டங்கள் குறித்த பரிந்துரைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதை கட்டாயப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (25) ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அவர்களை டோக்கியோ நகரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஜப்பானிய பிரதமரால் சிநேகபூர்வமான வரவேற்பளிக்கப்பட்டது.

இரு நாடுகளினதும் தலைவர்களது சுமூகமாக கலந்துரையாடலை தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்காக இலங்கைக்கு ஜப்பான் வழங்கி வரும் ஒத்துழைப்புக்களுக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பான் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

அதேபோல் இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வது தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.
அதனையடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜப்பானிய நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (25) டோக்கியோ நகரில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டங்கள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொஷிமாசா ஹயாஷியை சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு ஒப்பந்தங்களை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதோடு, பொருளாதாரம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல துறைகள் வாயிலாக ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அதேபோல் இலங்கை – ஜப்பான் சங்கத்தினால் டொக்கியோ நகரில் இன்று (25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலை உணவு விருந்துபசாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுவோ புகூடா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீள மைப்பதற்காக முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டம் தொடர்பில் ஜப்பானிய முன்னாள் பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது விளக்கமளித்தார்.

தற்போது இலங்கைக்குள் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சிறந்த சூழல் உருவாகியுள்ளதென தெரிவித்த ஜனாதிபதி, இலங்கைக்கு முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஜப்பானிய முன்னாள் பிரதமர்களுள் ஒருவரான டாரோ அஸோ அவர்களையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடியிருந்ததோடு, இலங்கையுடன் காணப்படும் நெருக்கமான உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வது தொடர்பில் இங்கு ஆலோசிக்கப்பட்டது.

அதனையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (25) சிங்கப்பூர் பிரதி பிரதமர் லோரன்ஸ் வொன்க் (Lawrence Wong) அவர்களை டோக்கியோ நகரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அர்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி மீண்டும் உறுதியளித்தார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன