ஒரு சில மதுபான உற்பத்தி நிறுவனங்களினால் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் போலியான முறையில் பயன்படுத்தப்பட்டமையால் அரசாங்கத்துக்குப் பெருமளவு வரிவருமான இழப்பு ஏற்பட்டமை தொடர்பில் முதலில் கலந்துரையாடலை ஆரம்பித்தமை மற்றும் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்கியது வழிவகைகள் பற்றிய குழு என அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக தெரிவித்தார்.
மதுபானப் போத்தல்களில் போலியான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பது தொடர்பில் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாக 2023.09.03ஆம் திகதி ஊடகங்களில் வெளியான செய்தி குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நிதி மேற்பார்வைக் குழுவான வழி வகைகள் பற்றிய குழுவுக்கு, நிலையியற் கட்டளைகளுக்கு அமைய அரசாங்கத்திற்குப் பிரதான வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் மூன்று நிறுவனங்களான இலங்கை சுங்கம், உண்ணாட்டரசிறைத் திணைக்களம் மற்றும் இலங்கை மதுவரித் திணைக்களம் போன்ற நிறுவனங்களின் செயலாற்றுகை மற்றும் அந்த நிறுவனங்களின் வருமானங்கள் ஈட்டப்படும் பொறிமுறை, வரி அறவீடு மற்றும் சுங்கக் கட்டணங்கள் மற்றும் அரசாங்கத்துக்கு மேலதிக வருமானத்தை ஈட்டுவதற்குத் தேவையான சகல விடயங்கள் குறித்தும் ஆராய்ந்து பணிப்புரைகளை முன்வைப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இந்த விடயம் இலங்கை மதுவரித் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினரின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட குழுவின் பல்வேறு அமர்வுகளில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டிருந்ததுடன், இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக இலங்கை மதுவரித் திணைக்களத்தினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான காலக்கெடு தொடர்பில் குழுவினால் பணிப்புரைகள் பல முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர் பயன்பாட்டைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் போலியான ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடங்கலான பரிந்துரைகளைக் கொண்ட வழிவகைகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை செப்டெம்பர் 06ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் கௌரவ சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்தார்.