நாட்டின் உயிர்நாடி இலங்கை பாராளுமன்றம் – இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு
எதிர்காலத்துக்குத் தேவையான முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளை மாணவர் பாராளுமன்றங்களின் ஊடாக சட்டவாக்கத்திற்கு முன்வைக்க முடியும் என கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்நாட்டிலுள்ள அனைத்து மாணவர் பாராளுமன்றங்களையும், இலங்கைப் பாராளுமன்றத்தையும் ஒன்றிணைத்து செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோரின் பங்களிப்பில் (10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த அமர்வை ஆரரம்பித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இரத்தினபுரி மாவட்டத்தின் சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்திற்கு பாராளுமன்றத்தின் நடைமுறைகள் தொடர்பில் நடைமுறை அனுபவத்தை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகம் மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

இதற்கமைய இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சபாநாயகர், பிரதமர், அமைச்சர்களின் தெரிவு இடம்பெற்றது. இதனைத் தெடர்ந்து மாணவர் பாராளுமன்ற பிரதமர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதவிச் சத்தியம் செய்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, இந்நாட்டின் உயிர் நாடியாக இலங்கைப் பாராளுமன்றம் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். பாராளுமன்றம் இல்லாத நாட்டில் அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்படும் என்று சுட்டிக்காட்டிய சபாநாயகர், மாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் மதிப்புப் பற்றிய சிறந்த புரிதலை ஏற்படுத்திக் கொள்வது அவசியமானது என்றார்.