கொள்ளையர்கள் இலகுவாக கொள்ளையில் ஈடுபடும் இடங்களாக வங்கிகள், நிதிநிறுவனங்கள் மற்றும் நகைக்கடைகள் என்பன காணப்படுவதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
நிதி நிறுவனங்களுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் எவ்வாறு உட்புகுவது, எவ்வாறு வெளியேறுவது, என்பது தொடர்பில் முன்னரே ஆராய்ந்து கொள்வதோடு, கொள்ளைகளுக்காக நவீன தொழில் நுட்பங்களையும் இந்த கும்பல் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குப்பட்ட பகுதியில் இயங்கிவரும், வங்கிகள் மற்றும், நிதி நிறுவனங்களின் முகாமையாளர்கள் தற்போதைய காலகட்டத்தில் எதிர்கொண்டுள்ள நிதி பாதுகாப்பு தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிசாரால் ஆலோசனை வழங்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை (08) மாலை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குப்பட்ட பகுதியில் இயங்கிவரும், வங்கிகள், நிதி நிறுவனங்கள், உள்ளிட்ட பல நிதி தொடர்பில் மக்களுக்கு சேவையாற்றிவரும் அமைப்புக்களின் முகாமையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் அவர் நிதி நிறுவனங்களின் பாதுகாப்பு தொடர்பில் விளக்கமளிக்கையில்
குற்றவாளிகள் எவ்வாறு கொள்ளைகளை மேற்கொள்ளலாம் , நிதி நிறுவனங்களுக்குள் சூட்சுமமான முறையில் எவ்வாறு உட்புகுவது, எவ்வாறு வெளியேறுவது, என்பது தொடர்பில் முன்னரே ஆராய்ந்து கொள்வதோடு, அவர்கள் கொள்ளைகளுக்காக நவீன தொழில் நுட்பங்களையும், பயன்படுத்துகின்றார்கள்.
தன்னியக்க நிதிப் பரிமாற்றல்(ஏரிஎம், சிரிஎம்) இயந்திரங்களிலும், முகமூடி, ஜக்கட், தலைக்கவசம், போன்வற்றையும் அணிந்து சென்று கொள்ளையடிக்கின்றார்கள். இவைகள் தொடர்பில் நிதி நிறுவனங்களின் முகாமையாளர்கள், உத்தியோகஸ்த்தர்கள், பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் உள்ளிட்ட அனைவரும் மிகவும் விழிப்புடன் செயற்படல் வேண்டும். நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு மேலதிக பாதுகாப்புத் தேவை என கருதினால் எதுவித தயக்கமுமின்றி 24 மணி நேரமும் எமது பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரமத பொலிஸ் பரிசோதகர் ரி.அபஜவிக்கிரம் மேலும் தெரிவித்தார்
பண வடங்களை கையாளும் போது எதிர்கொள்ளும் பாதுகாப்பு, கொள்ளையர்களை இனம்காணுதல், பாதுகாப்பு கமராவில் பதிவாகும் காட்சிகளைப் பதிவு செய்தல், உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பிலும் இதன்போது முகாமையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.பி.ஜோய், பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கே.ரமணன் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
